அயோத்தி பிரச்னை:  உச்சநீதிமன்றத்தை மதிப்போம்- பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயில் பிரச்னையை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது; எனவே, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதனை மதித்து நடக்க வேண்டும். இந்த விஷயத்தில் சிலர் தேவையில்லாத விஷயங்களைப்
நாசிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி. உடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், 
நாசிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி. உடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், 


அயோத்தி ராமர் கோயில் பிரச்னையை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது; எனவே, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதனை மதித்து நடக்க வேண்டும். இந்த விஷயத்தில் சிலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு துணிவுடன் செயல்பட வேண்டும். இது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருக்கு பதிலளிக்கும் வகையிலேயே மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, தேசப் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது நமது நாட்டிலேயே குண்டு துளைக்காத கவச உடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நமது வீரர்களுக்கான தேவை நிறைவேற்றப்படுவதுடன், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் நாம் ஏற்றுமதி செய்து வருகிறோம். 

2014-ஆம் ஆண்டு வரை நமது வீரர்கள் குண்டு துளைக்காத கவச உடைகள் இல்லாமல்தான் எல்லையைக் காத்து வந்தனர்.
ராணுவ பலம் அதிகரிப்பு: அண்மையில், அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன. விரைவில் ரஃபேல் போர் விமானங்களும் படையில் இணையவுள்ளன. பாதுகாப்புத் துறை தொடர்பான பல முக்கிய முடிவுகளை, நமது அரசு மேற்கொண்டு, ராணுவத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், முந்தைய ஆட்சியில் ராணுவம் தயார்நிலையில் இல்லை. ராணுவத்தின் தேவைகள் பலமுறை முன்வைக்கப்பட்டும், அவை நிறைவேற்றப்படவில்லை.

அயோத்தி பிரச்னை:  அயோத்தி ராமர் கோயில் பிரச்னையில் சிலர் தேவையில்லாமல் தொடர்ந்து பேசிவருவது எனக்கு வியப்பளிக்கிறது. அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் இப்போது விசாரித்து வருகிறது. எனவே, இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தை மதித்து நடக்க வேண்டும். அயோத்தி விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருபவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நமது நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் அது.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்: பாஜக தலைமையிலான அரசு மத்தியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றவுடன், ஒரு பிரதமராக மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; அரசின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்; அதன் மூலம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். இதன் விளைவாக ஆட்சியின் முதல் 100 நாள்களில் முக்கிய வாக்குறுதிகளை (ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததைக் குறிப்பிடுகிறார்) நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவை சர்வதேச அளவில் மிகப்பெரிய சக்தியாக முன்னிறுத்தியுள்ளோம். உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நட்புறவை விரும்புகின்றன. சர்வதேச அளவில் நமது நாட்டின் கெளரவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வருவாய் உறுதித் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.20,000 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

பவார் குறித்து விமர்சனம்: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் குறித்து அண்டை நாடு (பாகிஸ்தான்) என்ன கருத்தைக் கொண்டுள்ளதோ, அதே கருத்தை காங்கிரஸ் தலைவர்கள் (ராகுல்) கொண்டுள்ளதில் எனக்கு வியப்பு ஏதுமில்லை. ஆனால், இந்த விஷயத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள், வாக்கு வங்கி அரசியலைக் கருத்தில் கொண்டு பேசுவது எனக்கு வருத்தமளிக்கிறது என்றார் மோடி.

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக - சிவசேனை கூட்டணி ஓரணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் சூழல் உள்ளது. இதில், பாஜக-சிவசேனை கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், தேச ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்து வந்ததற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகள்தான் காரணம். இப்போதைய அரசு காஷ்மீரில் ஒரு புதிய சொர்க்கத்தை உருவாக்கி வருகிறது. காஷ்மீரில் அனைவரையும் மத்திய அரசு அரவணைத்துச் செல்கிறது.


காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து வந்த பயங்கரவாதம்தான் இத்தனை ஆண்டுகளாக பிரச்னையாக இருந்து வந்தது. இப்போது, அதனை உறுதியாக முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு இத்தனை ஆண்டுகள் நீடித்து வந்த வன்முறை, பயங்கரவாதம், பிரிவினைவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. அங்கு இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்றார் பிரதமர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com