காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார், ப.சிதம்பரம் இருக்கும் திஹார் சிறையில் சிறை எண்.7ல் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம் கடந்த 5ம் தேதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறை எண்.7ல் 15ம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவரும் திஹார் சிறையில் எண்.7ல் அடைக்கப்பட்டுள்ளார்.
திஹார் சிறைச்சாலையில் 7- ஆம் எண் சிறையில் பொதுவாக, பொருளாதாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் இருக்கும் அல்லது விசாரணையை எதிர்கொள்ளும் குற்றவாளிகள் இங்கு அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி, ப.சிதம்பரமும், டி.கே.சிவகுமாரும் சிறை எண்.7ல் அடுத்தடுத்த அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொள்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறப்படுகிறது.
மேலும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக், பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், விமான ஊழலில் சிக்கியுள்ள தீபக் தல்வார் ஆகியோரும் சிறை எண். 7இல் தான் அடைக்கப்பட்டுள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு இதே சிறையில் தான் அடைக்கப்பட்டார்.
இதனால் வி.ஐ.பிக்களின் சிறையாக, முக்கியமாக காங்கிரஸ் தலைவர்களின் சிறையாக சிறை எண்.7 மாறி வருகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.