நாக்பூர்: இட ஒதுக்கீடு மட்டுமே ஒரு சமூகத்தின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் செவ்வாயன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்றார். அப்போது சாதி அடிப்படையில் பாஜகவில் இடஒதுக்கீடு தந்து தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிராவின் பின்தங்கிய மாலி சமூகத்தினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:
பின்தங்கிய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு என்பது அவசியம்தான். ஆனாலும் அது மட்டுமே அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தாது. கல்வி, சமூக மற்றும் பொருளாதார வழிமுறைகள் மூலமே ஒரு சமூகம் முன்னேற்றம் அடையமுடியும். எல்லா சாதி மக்களின் ஆதரவோடும்தான் தற்போது ராஜஸ்தான் முதலமைச்சராக இருக்கும் அசோக் கெலாட் ஆட்சி ஏற்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நானும் கூறிவந்தேன். ஆனால், இந்திரா காந்தி, வசுந்தர ராஜே, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் எப்படி இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறி வந்தார்கள் என்ற கேள்வி எப்போதும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.