காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா. உதவ வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த கல்வி உரிமை ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அங்கு வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பதற்றமான சூழல் காரணமாக, பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுட்டுரையில் மலாலா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "காஷ்மீரில் அமைதியை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா.வுக்கும், சர்வதேச தலைவர்களுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.அங்குள்ள குழந்தைகள், 40 நாள்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு செல்லவில்லை என்றும், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அஞ்சுவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் கவலையளிக்கிறது. எனவே, குழந்தைகள் மீண்டும் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக செல்வதற்கு உதவ வேண்டும்.
தொலைதொடர்பு வசதிகள் முடக்கப்பட்டுள்ளதால், உலகத்திடமிருந்து காஷ்மீர் மக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். அவர்களின் குரலை கேட்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.