"நாடு மிகப்பெரிய நெருக்கடி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் தங்களது அரசியல் சாசன உரிமைகளைப் பாதுகாக்க தயாராக வேண்டும்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில் கூறியுள்ளதாவது:
இன்று (செப்.15) சர்வதேச ஜனநாயக தினம். எனவே, நமது நாட்டில் நிறுவப்பட்ட அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்க மீண்டும் ஒருமுறை நாம் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையில், நம்நாடு மிகப்பெரிய அவசர நிலையை எதிர்கொண்டுள்ளது.
இதனை உணர்ந்து, அரசியலமைப்பு நமக்கு வழங்கிய உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தை பாதுகாக்க நாம் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அந்த சுட்டுரைப் பதிவில் மம்தா தெரிவித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ எச்சரிக்கை: "மம்தா பானர்ஜி தனது தவறுகளை திருத்திக் கொண்டு சரியான வழியில் செல்ல வேண்டும் அல்லது முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் போல சிறைவாசம் அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்' என்று உத்தரப்பிரதேசத்தின் பைரியா சட்டப்பேரவை தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்தி சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவரை வங்க தேசத்தின் பிரதமராக்க வேண்டும். மோசமான நாள்கள் தன்னை நோக்கி வருவதை அவர் உணராமல் உள்ளார்.
தனது தவறுகளை அவர் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நேர்ந்த அதே தலைவிதியைத்தான் மம்தாவும் சந்திக்க நேரிடும்' என்றார்.