நிலவும் சூழ்நிலை குறித்து அறிக்கை அனுப்பிவைக்குமாறு ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
ஜம்மு-காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே அங்குள்ள உயர் நீதிமன்றத்தை அணுக இயலவில்லை என மூத்த வழக்கறிஞர் ஹூஸிஃபா அஹ்மதி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறுவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக இனாக்ஷி கங்குலி மற்றும் சாந்தா சின்ஹா ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஹூஸிஃபா இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு செல்வதில் தடையிருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். இதில் யார் குறுக்கிடுவது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் ஒரு உயர் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை என்பது மிகப்பெரிய பிரச்னையாகும்.
இதில் நீங்கள் தவறான தகவலை தெரிவித்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான தக்க தண்டனை நிச்சயம் வழங்கப்படும். தேவைப்பட்டால் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்துக்கு தனிப்பட்ட முறையில் நேரில் சென்று ஆய்வு செய்து, அதன் தலைமை நீதிபதியுடன் பேசத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.