புது தில்லி: 81 வயது தாத்தா போல வேடம் அணிந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 32 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
நியூ யார்க் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக சக்கர நாற்காலியில் வந்த ஜெயேஷ் பட்டில் முதற்கட்ட பரிசோதனை மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகளின் பரிசோதனைகளையும் கடந்து சென்ற நிலையில், கைது செய்யப்பட்டதாக சிஐஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இளைஞரின் அனைத்து முயற்சிகளும், இவ்விரண்டு சோதனைகளில் வெற்றி பெற்றாலும் கூட இறுதியில் அவர் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. காரணம், சிஐஎஸ்எஃப் அதிகாரிகளுக்கு, அந்த நபரின் தோற்றத்துக்கும், அவரது குரலுக்கும் சம்பந்தமே இல்லை என்ற சந்தேகம் எழுந்ததே.
நரைத்த தலைமுடி ஆனால் தளராத இளமையான தோல் ஏற்படுத்திய சந்தேகத்தை அவரது முகத்தில் ஒரு சுருக்கம் கூட இல்லாதது உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தைச் சேர்ந்த படேல், அம்ரிக் சிங் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூ யார்க் செல்ல திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. மேற்கொண்டு விசாரணைக்கு அவர் தில்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.