ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டியது மற்றும் சமீபத்தில் அங்கு நடந்த சில பொதுமக்களின் உயிரிழப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதிகள் 8 பேர் பிடிபட்டுள்ளனர்.
அஜிஸ் மிர், ஒமர் மிர், தஸீப் நஜர், இமிதியாஸ் நஜர், ஒமர் அக்பர், பைஸன் லதீப், தானிஷ் ஹபீப் மற்றும் சௌகத் அகமது மிர் ஆகிய 8 பயங்கரவாதிகள் இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கணினி, சுவரொட்டி தயாரிப்பு இயந்திரம், துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.