மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா -2019 அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இச்சட்டத்தில் பல்வேறு முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் புதிய சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பிடாரில் திங்கள்கிழமை ஒரே நாளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மட்டும் 1,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9,72,700 அபராதத் தொகை விதித்து போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.