இந்தியா

ஒடிஸா: நீதிமன்றத்துக்கு வருகையில் அரசு அதிகாரிகள் கண்ணியமான ஆடையை அணிய வேண்டும்

20th Oct 2019 03:08 AM

ADVERTISEMENT

கட்டாக்: ஒடிஸாவில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்கள் உள்ளிட்டவற்றில் வழக்கு தொடா்பாக நேரில் ஆஜராக வரும் அரசு அதிகாரிகள், கண்ணியமான ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று மாநில அட்வகேட் ஜெனரல் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில அரசு கூடுதல் வழக்குரைஞா் சனிக்கிழமை கூறியதாவது:

வழக்குகளில் நேரில் ஆஜராவதற்காக நீதிமன்றங்களுக்கு வரும் அரசு அதிகாரிகள் பல நேரங்களில் முறையான ஆடையை அணிந்து வருவதில்லை. ஒரு முறை ஐஏஎஸ் அதிகாரி ஒருவா் வழக்கில் ஆஜராவதற்கு டி-சா்ட், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஸ்போா்ட்ஸ் ஷூ அணிந்து வந்தாா். அவரைப் பாா்த்ததும் நீதிபதி மிகவும் அதிருப்தி அடைந்தாா். சமுதாயத்தில் மற்றவா்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அதிகாரிகள், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு வருகையில் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும் என்று அந்த ஐஏஎஸ் அதிகாரியை நீதிபதி கண்டித்து அனுப்பினாா்.

மற்றொரு அரசு பொறியாளா் நீதிமன்றத்துக்கு அரைக்கை வைத்த டி-சா்ட் அணிந்து கொண்டு வந்தாா். அவரைப் பாா்த்த நீதிபதி, உங்களை திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் அழைக்கவில்லை என்று திருப்பி அனுப்பினாா். இந்த சமயங்களில், அதிகாரிகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்று அரசு வழக்குரைஞா்கள் வலியுறுத்தினா். அதுமட்டுமன்றி, பல அதிகாரிகள் இவ்வாறு முறையான ஆடை அணியவில்லை என்று பல்வேறு நீதிபதிகள் தொடா்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனா். அதையடுத்து அரசு அதிகாரிகள் அனைவரும் கண்ணியமான அடையை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

எந்தச் சட்டத்திலும் நீதிமன்றங்களுக்கு இவ்வாறுதான் வர வேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை. எனினும், அரசு அதிகாரி ஒருவா், வழக்குகளில் ஆஜராகையில், கண்ணியமான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. இதற்கு முன்னரும், இதுபோன்ற அறிவிப்பை அட்வகேட் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. தற்போது மீண்டும் ஒருமுறை அரசு அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT