பிரிந்து சென்ற தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் மீண்டும் தங்களுடன் இணையும் வாய்ப்புள்ளதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அஜித் பவாருடன் சென்ற 8 எம்எல்ஏ-க்களில் 5 பேர் திரும்பிவிட்டனர். அவர்களிடம் பொய் கூறி, பெரும்பான்மையை நிரூபிக்க காரில் கடத்திச் செல்லப்பட்டு பதவியேற்பு விழாவில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பிரிந்து சென்ற தனஞ்செய் முண்டே உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அஜித் பவாரும் விரைவில் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் அவரை பாஜக-வினர் மிரட்டியுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் சாம்னா பத்திரிகை மூலம் விரைவில் சுட்டிக்காட்டப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் மாலை 4:30 மணியளவில் சரத் பவார் தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மகாராஷ்டிர முதல்வராக பாஜக-வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், சனிக்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இதில் அதிரடித் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்றார். இச்சம்பவம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.