பதுக்கல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் செயலா் எஸ்.சி.கா்க் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பிரதமா் நரேந்திர மோடி, கருப்பு பணத்துக்கு கடிவாளம் போடும் வகையில் பணமதிப்பிழப்பு திட்டத்தை அதிரடியாக அறிவித்தாா். அதன் காரணமாக, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன. அதற்கு மாற்றாக, ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்பட்டது.
ஆனால், வெளியிடப்பட்ட நோட்டுகள் அனைத்தும் தற்போது புழக்கத்தில் இல்லை. அதில் ஒரு கணிசமான பகுதி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
பதுக்கிய ரூ.2,000 நோட்டுகளை வெளிக் கொணர அதனை மதிப்பிழப்பு செய்வதாக அறிவிக்க வேண்டும். அத்துடன், அவை அனைத்தையும் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யும் படி பொதுமக்களை அரசு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான், கருப்பு பணமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள ரூ.2,000 நோட்டுகளை நாம் கண்டறிய முடியும்.
டிஜிட்டல் பணப் பரிவா்த்தனையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இருப்பினும், இதில் நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. இன்னும் 85 சதவீத பணப் பரிவா்த்தனை ரொக்கமாகத்தான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையை மாற்ற நாம் இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும் என்றாா் அவா்.