5 ஆண்டுகள் ஆட்சி செய்ய விட்டிருந்தால் கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக்கி இருப்பேன் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு தாசரஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கர்நாடக உதய தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொழில் துறையினரும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழலை ஒழிப்பதற்காக ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்று கூறும் மத்திய அரசு, ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டை அச்சிட்டதால், அது ஊழலுக்கு மேலும் வழி வகுத்துள்ளது. மத்திய அரசின் நடவடிகையால் ஜவுளித் துறையில் 5 லட்சம் பேர் வேலை இழந்து, வீதிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான நெசவாளர்களின் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூடப்பட்டுள்ளன.
பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் திரண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உரை நிகழ்த்த பிரதமர் சென்ற போது, பேருந்துகளில் மக்கள் கூட்டத்தை வரவழைத்துக் கொண்டதை அனைவரும் அறிவர் என்றார்.
கூட்டணி ஆட்சியில் எந்த முடிவையும் சுதந்திரமாக எடுக்க முடியாமல் போனது. 2 பேரின் மேற்பார்வையில் நான் ஆட்சியை நடத்துவது கடினமாக இருந்தது. என்றாலும், என்னை 5 ஆண்டுகள் சுதந்திரமாக ஆட்சியை செய்ய அனுமதித்திருந்தால், நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக கர்நாடகத்தை ஆக்கியிருப்பேன். வருமானவரித் துறை, அமலாக்கத் துறையினரின் அச்சுறுத்தலுக்கு இணங்கி, முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக நான் பேசுவதாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார் குமாரசாமி.