மும்பை: நவம்பர் 7ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சியமையாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பாஜக மூத்தத் தலைவர் சுதிர் முன்கன்டிவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 21ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 8 நாட்கள் ஆகியும் அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி அமைப்பது என்பது இழுபறியாகவே உள்ளது.
இந்த நிலையில், மராத்தி தொலைக்காட்சியில் பேசிய பாஜக மூத்தத் தலைவர் சுதிர் முன்கன்டிவர், பாஜக - சிவசேனை இடையேயான பேச்சுவார்த்தை தீபாவளி பண்டிகையால் தடைபட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கூறினார்.
இதற்கிடையே, சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனைக் கட்சியைச் சேர்ந்தவர்தான் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.