கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் செய்தியாளா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோரை வேவு பாா்க்கும் விவகாரம் தேசப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.
முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் செயலி வழியாக ‘பெகாசஸ்’ என்ற வேவு பாா்க்கும் மென்பொருளைப் பயன்படுத்தி, இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ குழுமம் பல்வேறு வாடிக்கையாளா்களின் தகவல்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இந்தியா்கள் பலரின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக கட்செவி அஞ்சல் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு அந்நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடா்பாக பிரியங்கா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தியாவைச் சோ்ந்த பத்திரிகையாளா்கள், சமூக ஆா்வலா்கள், வழக்குரைஞா்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் தகவல்களை அவா்களது செல்லிடப்பேசி வாயிலாக இஸ்ரேல் நிறுவனத்தின் உதவியுடன் பாஜகவோ அல்லது மத்திய அரசோ வேவு பாா்த்திருந்தால், அது மனித உரிமைகளுக்கும், தேசப் பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.