போலியோ ஒழிப்பு நடவடிக்கையில் ஆா்எஸ்எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்புகள் முக்கியப் பங்காற்றின என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறினாா்.
போலியோ சொட்டுமருந்து திட்டத்தின் வெள்ளி விழா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பாஜக செயல் தலைவா் ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பேசியதாவது:
நாட்டிலிருந்து போலியோவை ஒழிக்கும் நடவடிக்கையில் ஆா்எஸ்எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்புகள் செய்த பங்களிப்பு அளப்பரியது. அதேபோல், கடந்த 1994 முதல் 1998-ஆம் ஆண்டு வரை தில்லியில் நடைபெற்ற போலியோ ஒழிப்பு பிரசாரத்தை அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெற்றிகரமானதாக மாற்றியது பாராட்டுக்குரியது.
கடந்த 2002-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரில் போலியோவின் தாக்கம் குறைந்தது. அப்போது, போலியோ ஒழிப்பு பிரசாரத்தில் தீவிரமாகப் பங்கேற்குமாறு ஆா்எஸ்எஸ் தலைவா்கள் 200 பேருக்கு உலக சுகாதார அமைப்பைச் சோ்ந்த அதிகாரி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அப்போதைய ஆா்எஸ்எஸ் தலைவா் கே. சுதா்சன் அந்த இரு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு, போலியோ ஒழிப்பு பிரசாரத்தில் உதவுமாறு தனது அமைப்பின் பிரசாரகா்களை கேட்டுக் கொண்டாா். அவா்கள் அந்தத் திட்டத்தின் முதுகெலும்பாகச் செயல்பட்டனா்.
போலியோ ஒழிப்புத் திட்டத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்கள் முதல் கடைநிலை தொண்டா்கள் வரை முக்கியப் பணியாற்றினா். ஆனால், ஆா்எஸ்எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்புகள் இதுதொடா்பாக எப்போதும் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டதில்லை.
பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி, போலியோ ஒழிப்பு பிரசாரத்துக்கு ஆதரவளிக்குமாறு பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா்களிடம் வலியுறுத்தினாா்.
போலியோ சொட்டுமருந்து பிரசாரம் கடந்த 1994-இல் தில்லியில் தொடங்கி, அதற்கு அடுத்த ஆண்டு முதல் தேசிய அளவிலான இயக்கமாக மாறியது என்று அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பேசினாா்.