பதினேழாவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான நிலையில், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சனிக்கிழமை அளித்தனர்.
அப்போது மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும், தேர்தல் ஆணையர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாஸா, சுஷீல் சந்திரா ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்குச் சந்தித்தனர். அப்போது, பதினேழாவது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அவரிடம் சமர்ப்பித்தனர். வரலாற்றிலேயே மிகப் பெரிய ஜனநாயகத்தின் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். தேர்தல் ஆணையம், மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த ஆணையத்தின் ஊழியர்கள், அதிகாரிகள், மத்திய, மாநில அரசின் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் சார்பில் குடியரசுத் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் பெரிய அளவில் பங்கேற்று தேர்தல் முறையை வெற்றி பெற வைத்ததற்கும், அசைக்க முடியாத ஜனநாயக பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்ததற்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு குடியரசுத் தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.