காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி (68) தொடர்ந்து 2ஆவது முறையாக விரைவில் பதவியேற்கிறார்.
இதையடுத்து, தனிபெரும்பான்மை பலத்துடன், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2ஆவது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெறுகிறார்.
இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோம். அனைவரது நம்பிக்கையும் நமக்குத் தேவை. வலுவான, கட்டுக்கோப்பான இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் வாழ்த்துகள். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.