17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 350 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 350 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், பாஜக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், "10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்கள் சொல்லுங்கள்" என்றார்.
இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது பேசிய அவர், "பாஜக செல்வாக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு" என்றார்.