பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சாதனை படைத்துள்ளதாக உறுப்பு நாடுகள் புகாழரம் சூட்டியுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீண்டும் கொண்டு வந்தன. எனினும், மற்றொரு நிரந்தர உறுப்பு நாடான சீனா தெரிவித்த ஆட்சேபத்தால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்தச் சூழலிம், தனது ஆட்சேபத்தை சீனா விலக்கிக் கொண்டதையடுத்து, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக பாதுகாப்பு கவுன்சில் இந்த மாதம் 1-ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான அமெரிக்க இடைக்கால தூதர் ஜொனாதன் கோஹென் கூறியதாவது:
ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாகவும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.-கொராஸனை சர்வதேச பயங்கரவாத அமைப்பாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
அஸார் மசூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததன் மூலம், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அந்தக் குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பதை சர்வதேச சமுதாயம் நிரூபித்துள்ளது என்றார் அவர்.
ஐ.நா.வுக்கான ஜெர்மனி தூதர் கிறிஸ்டோப் ஹியூஸ்கென் கூறுகையில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தடைகள் இருந்த போதிலும், அந்தத் தடை தற்போது நீங்கியுள்ளது நல்ல அறிகுறியாகும் என்றார்.
இதுதவிர, போலந்து, சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தன.