வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (புதன்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது.
17-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் காவல் துறை தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த எச்சரிக்கையில், "நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடிக்கலாம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புக்குத் தேவையான போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
"குறிப்பாக உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு வாக்கு எண்ணிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று மத்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது" என்றார்.