புது தில்லி: இந்திய விமானப்படையின் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது.
இந்தியா மற்றும் ரஷியா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணையானது சுமார் 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக தரையில் இருந்து விண்ணுக்கு ஏவி பிரமோஸ் பரிசோதிக்கப்பட்டது. அதையடுத்து இந்த ஏவுகணையானது 2003-ம் ஆண்டு கடலில் இருந்து விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.