உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 31 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 27 நீதிபதிகளுடன் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதில், நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் போபண்ணா ஆகியோரது பெயர்களை பதவி மூப்பு மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தைச் சுட்டிக்காட்டி மத்திய அரசு நிராகரித்தது. இதையடுத்து, மத்திய அரசின் ஆட்சேபங்கள் குறித்து ஆய்வு நடத்திய கொலீஜியம் அமைப்பு அவர்களை மீண்டும் பரிந்துரைத்தது.
இந்த நிலையில், 4 புதிய நீதிபதிகளுக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அல்லது குடியரசுத் தலைவர் இதற்கான உத்தரவில் நாளை கையெழுத்திட்ட பிறகு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.