17-வது மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
இதில், பெரும்பாலான கணிப்புகள் பாஜக கூட்டணியே பெரும்பான்மையை பெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், தினமணி இணையதளம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என்று சிறிய வாக்கெடுப்பை நடத்தியது.
ஃபேஸ்புக் பக்கத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி என இரண்டு தேர்வுகள் கொடுக்கப்பட்டது.
இதில் மொத்தம் 1,067 பேர் வாக்களித்தனர். பாஜக கூட்டணிக்கு 644 பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு 423 பேரும் வாக்களித்துள்ளனர். அதாவது, பாஜக கூட்டணிக்கு 60.35 சதவீத பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு 39.64 பேரும் வாக்களித்துள்ளனர்.
இதேபோல் டிவிட்டர் பக்கத்திலும் கேள்வி கேட்கப்பட்டது. அதில், பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் 3-வது அணி என மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டது.
இதில் மொத்தம் 1,007 பேர் வாக்களித்தனர். பாஜக கூட்டணிக்கு 37 சதவீதம் பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு 54 சதவீதம் பேரும், 3-வது அணிக்கு 9 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தங்களது கருத்துக் கணிப்பை தெரிவித்த தினமணி வாசகர்களுக்கு எங்களது நன்றி!