மும்பை: நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் அரசின் இந்தியன் ஆயில் காப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியோடு முடிவடைந்த 2018-19 நிதியாண்டிற்கான வருவாய், நிகர லாபம் மற்றும் கடன் உள்ளிட்ட விபரங்களை, நாட்டின் பெரும் நிறுவனங்கள் பங்குச் சந்தை ஒழுங்கு செய்யும் அமைப்பான செபியிடம் தாக்கல் செய்து வருகின்றன.
அதன்படி நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் அரசின் இந்தியன் ஆயில் காப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:
2018-19 ஆம் நிதியாண்டு: வணிக வருவாய்
இந்தியன் ஆயில் காப்பரேஷன் : ரூ. 6.17 லட்சம் கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ரூ. 6.23 லட்சம் கோடி
2018-19 ஆம் நிதியாண்டு: நிகர லாபம்
இந்தியன் ஆயில் காப்பரேஷன் : ரூ. 17.274 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ரூ. 39,558 கோடி
செவ்வாயன்று சந்தையில் ரூ. 1345 க்கு விற்பனையான பங்கு விலையின் படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பானது ரூ. 8.52 லட்சம் கோடியாக உள்ளது
இதையடுத்து வணிக வருவாய், நிகர லாபம் மற்றும் சந்தை மூலதனம் ஆகிய மூன்று அளவீடுகளிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது இந்தியாவின் முதல் நிறுவனமாக முதலிடம் பிடிக்கிறது.
அதேநேரம் ஒரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது.
2018-19 ஆம் நிதியாண்டு: மொத்தக் கடன்
இந்தியன் ஆயில் காப்பரேஷன் : ரூ. 92,700 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ரூ. 2.87 லட்சம் கோடி
கடனைப் பொறுத்த வரை ரிலையன்ஸ் நிறுவனம்தான் முதலிடத்தில். உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.