மும்பை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையானது, திங்களன்று 1422 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து வந்த மக்களவைத் தேர்தலானது ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதில் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்றதைப் போலவே பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று நிறைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. இதன் முடிவுகள் தேசிய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.
வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்களன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. காலை சென்செக்ஸ் 950 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 962.12 புள்ளிகள் அதிகரித்து, 38,892.89 புள்ளிகளிலும், நிஃப்டி 286.95 புள்ளிகள் உயர்ந்து, 11,694.10 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,421.90 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 352 புள்ளிகளாக நிறைவடைந்தது.
இது கடந்த பத்தாண்டுகளில் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.