ஜெய்பூர்: ராஜஸ்தானில் 1998-ஆம் ஆண்டு அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகைகள் தபு, சோனாலி பெந்த்ரே, நடிகர் சைப் அலி கான் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜெய்பூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1998-ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக சென்றிருந்த போது அரிய வகை 'பிளாக் பக்' வகை மான்கள் இரண்டை வேட்டையாடியதாக பிரபல பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பெந்த்ரே, நீலம் கோத்தாரி மற்றும் உள்ளூர்வாசியான துஷ்யந்த் குமார் ஆகிய ஆறு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்பிரிவு 51-ன் படி ஜெய்பூர் நீதிமன்றம் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. மீதமுள்ள ஐந்து பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் செய்த மேல்முறையீடானது ராஜஸதான் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகைகள் தபு, சோனாலி பெந்த்ரே, நடிகர் சைப் அலி கான் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜெய்பூர் நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மாநில அரசு நீதிமன்றத்தில் மனு செய்ததை அடுத்து, கடந்த மார்ச் 11-ஆம் தேதி இவர்கள் ஐந்து பேருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் திங்களன்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் மஹிபால் சிங் தாக்கல் செய்த புதிய மனுவில், முன்னர் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நீலம் கோத்தாரி தவிர வேறு யாருக்கும் சென்று சேரவில்லை என்று தெரிவித்தார்.
இதையயடுத்தி இவர்கள் ஐந்து பேருக்கும் திங்களன்று மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் ஐந்து பேரும் 8 வாரங்களுக்குள் இந்த நோட்டீஸிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.