புது தில்லி: ரயில் தாமதத்தால் 'நீட்' எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய மனித வளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலம் பல்லாரியில் இருந்து பெங்களூரு சென்ற ரயில் தாமதத்தால் 600 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் திரும்பினர். திட்டமிட்டபடி காலை 6:20 மணிக்கு பெங்களூரு வரவேண்டிய ரயிலானது மதியம் 2:30 மணிக்கு சென்றதுதான் இதன் காரணம்.
தேர்வு எழுத முடியாத சில மாணவ-மாணவிகள் தங்களுடைய நிலை குறித்து, மத்திய ரயில்வே அமைச்சருக்கு ட்விட்டர் மூலம் தெரிவித்து, உதவுமாறு கோரிக்கை வைத்தனர். பலரது தரப்பில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ரயில் தாமதத்தால் 'நீட்' எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய மனித வளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களென அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.