ஒடிஸாவில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழையுடன் ஃபானி புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. புயல் தொடர்பான சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள், கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்று ஒடிஸா மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஃபானி புயல் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன், 24 மணிநேரங்களுக்குள்ளாக 12 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் காஞ்சம் பகுதியில் இருந்து 3.2 லட்சம் பேரும், பூரியில் இருந்து 1.3 லட்சம் பேரும் அடங்குவர். 90 ஆயிரம் தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மீட்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 7 ஆயிரம் சமையலறைகள் தயார் நிலையில் இருந்தன. இந்த மீட்பு நடவடிக்கைகளில் மொத்தம் 45 ஆயிரம் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். 10-க்கும் குறைவானவர்களே இந்த புயல் பாதிப்பில் சிக்கி உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.