ஒடிஸாவில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழையுடன் பானி புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. புயல் தொடர்பான சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள், கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்று ஒடிஸா மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஃபானி புயல் மேற்கு வங்கத்தை கடந்து சென்றது. இதனால் அங்கு கனமழை பெய்தது. கரக்பூரைக் கடந்து மேற்கு வங்கம் நோக்கி ஃபானி புயல் கடந்த போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
அந்த மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மிதுனபுரி, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், ஹெளரா, ஜார்கிராம், கொல்கத்தா, சுந்தரவனக் காடுகள் வழியாக புயல் கடந்து வங்கதேச பகுதிக்குச் சென்றபோது முற்றிலும் வலுவிழந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் காரணமாக ஒடிஸா, மேற்கு வங்கம் மட்டுமின்றி ஆந்திரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்தது.