சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர், 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலாவதாக வந்துள்ளனர்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வில் 13 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு எழுதினர்.
இத்தேர்வுக்கான முடிவு, மே மாதம் 3ஆவது வாரத்தில் அறிவிக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை, முன்கூட்டியே வெளியிடப்பட்டது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதை சேர்ந்த ஹன்சிகா சுக்லா, முசாஃபர்நகரை சேர்ந்த கரிஷ்மா அரோரா ஆகியோர் 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்தனர்.
ரேபரேலியை சேர்ந்த ரிஷிகேஷ் கௌராங்கி சவாலா, ஜிந்தை சேர்ந்த பாவ்யா ஆகியோர் 498 மதிப்பெண்களுடன் 2ஆவதாக வந்துள்ளனர். தில்லியை சேர்ந்த நீரஜ் ஜிண்டால், மேகவ் தல்வார் உள்பட 18 பேர், 3ஆவதாக வந்துள்ளனர்.
இத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக இருந்தது. மாணவிகள் 88.70 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவர்கள் 79.40 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இது 9 சதவீதம் அதிகமாகும்.
திருவனந்தபுரம் மண்டலம் 98.20 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்திலும், சென்னை மண்டலம் 92.93 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் 2ஆவது இடத்திலும், தில்லி மண்டலம் 91.87 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு தில்லி மண்டலம் 89 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும், 94.94 சதவீதம் என்ற தேர்ச்சி விகிதத்தில் இருந்து 95.43 தேர்ச்சி விகிதமாக அதிகரித்துள்ளது.