ரூ.8 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டுள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் திங்கள்கிழமை விலகினார்.
முன்னதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக்குழுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது கடன் பிரச்னையை தீர்க்க மேற்கொண்டு இடைக்கால நிதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் அக்குழுமத்தில் இருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு பெரும்பான்மையான கடன் தொகை வழங்கியுள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்த இடைக்கால நிதியை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பலதரப்பட்ட ஊழியர்கள் இதர நிறுவனங்களில் வேலை தேட தொடங்கியுள்ளனர். மேலும், அவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊழியர்களின் மொத்த ஊதியத்தில் இருந்து 12.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.