எல்லைக் காவல்படை பணிக்கான தேர்வில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். மொத்தமுள்ள 57 பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தோடா, கிஷ்த்வர், ரம்பன் மற்றும் உதம்பூர் ஆகிய மாவட்டங்களுக்காக நடத்தப்படுகிறது.
இதில் கலந்துகொண்ட நவாஸ் அகமது கூறுகையில், சுமார் 12 - 13 முறை இதற்காக முயற்சித்துள்ளேன், தேர்வாகும் வரை தொடர்ந்து முயற்சிப்பேன். இந்திய ராணுவத்தில் இணைய வேண்டும் என்பது என் குழந்தைப் பருவ கனவு. நமது நாட்டுக்காக சேவை செய்ய விரும்புகிறேன். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஜம்மு-காஷ்மீரில் வேலைவாய்ப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
எனவே இது எனக்கு மரியாதைக்குரிய வாழ்வாதாரத்தையும் அளிக்கும். இந்த தேர்வுக்கு கூட எனது வீட்டின் அருகில் அமைந்திருக்கும் மசூதியின் இமாம் தான் ரூ.1,500 அளித்து வழியனுப்பி வைத்தார். இந்திய ராணுவம் அனைவரையும் மரியாதைக்குரிய விதத்தில் நடத்துகிறது என்றார்.
ராகுல் குமார் கூறியதாவது, அனைவரும் ராணுவத்தில் இணைவது மிகவும் அவசியமாகும். அனைத்து இளைஞர்களுக்கும் அவர்களின் கனவு மெய்ப்பட இந்திய ராணுவம் சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி தரும். ராணுவம் நமது வேலைவாய்ப்பு தேவைகளை பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் நமது குடும்பங்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது என்றார்.