2009ம் ஆண்டு மார்ச் மாதம் 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு சரியாக 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 20 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுவரை நாணயங்களில் பயன்படுத்தாத வடிவில் 12 பக்கங்களைக் கொண்ட புதிய 20 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த 20 ரூபாய் நாணயத்தின் அகலம் 27 மில்லி மீட்டர் அளவில் இருக்கும். 10 ரூபாய் நாணயம் போலவே இரண்டு உலோக நிறங்களில் மூன்று உலோகங்கள் கலந்ததாகவும், வெளிப்பரப்பு 65 சதவீத காப்பர் உலோகத்தாலும், 15 சதவீதம் துத்தநாகம் மற்றும் 20 சதவீத நிக்கல் என்ற உலோகத்தாலும் அமைக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் உட்புறம் 75 சதவீத காப்பர், 20 சதவீத துத்தநாகம், 5 சதவீத நிக்கல் கொண்டதாக இருக்கும்.
ஆனால், 10 ரூபாய் நாணயத்தைப் போல விளிம்பில் பற்கள் கொண்ட அமைப்பு இல்லாமல், 20 ரூபாய் நாணயம் அமையும். ஒரு நாணயத்தின் எடை 8.54 கிராம் அளவில் இருக்கும்.
அசோக சக்ரம் மற்றும் சிங்க முகம் கொண்டதாகவும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெற்றிருக்கும். நாணயத்தின் இடது பக்கம் பாரத் என்ற வார்த்தை ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் வலது பக்கம் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
நாணயத்தில் தானியத்தின் படம் இடம்பெற்றிருக்கும். நாணயங்கள் ரூபாய் தாள்களை விட அதிக ஆயுளைப் பெற்றிருப்பதால் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
10 ரூபாய் நாணயம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளில் 13 புதிய வடிவமைப்புகளில் மாற்றப்பட்டது. சில மாற்றங்களால், 10 ரூபாய் நாணயம் போலியானது என்று வர்த்தகர்கள் இடையே சந்தேகம் ஏற்பட்டு, சிலர் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.