உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் காஷ்மீரைச் சேர்ந்த மூவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
லக்னௌவில் காஷ்மீரைச் சேர்ந்த வியாபாரிகள் மூவர் மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய நால்வரையும் கைது செய்துள்ளதாக டிஜிபி ஆனந்த் குமார் மற்றும் கூடுதல் டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அவர்கள் தெரிவிக்கையில்,
"இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பஜ்ரங் சோன்கார், அமர், ஹிமான்ஷூ மற்றும் அனிருத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றனர்.
இந்த வழக்கில் முதலில் சோன்கார் என்பவர் மட்டும் தான் கைது செய்யப்பட்டிருந்தார். அவர், விஷ்வ ஹிந்து தள அமைப்பைச் சேர்ந்தவர். அவர் மீது கொலை வழக்கு உட்பட 12 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதனி தெரிவித்தார்.
இவர்கள் மீது தற்போது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் காஷ்மீரைச் சேர்ந்த மூன்று வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காஷ்மீரிகளை மிகக் கொடூரமாக தாக்கியதாக தெரிவித்தனர்.
அவர்களை கல் எறிபவர்கள் என்று அழைத்தும், ஆதார் அட்டையை காண்பியுங்கள் என்றும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தை அருகில் இருந்த யாரும் தடுத்து நிறுத்தவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த யாரோ போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் வந்த பிறகே அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். போலீஸார் வருவதற்குள் இரண்டு காஷ்மீரி வியாபாரிகள் தப்பித்து ஓடினர். அப்சல் என்பவர் மட்டும் அந்த இடத்தில் இருந்தார்.
இதையடுத்து, அவர் உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டார். ஆனால், முதலில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அதன்பிறகு, தாக்குதல் நடத்தப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன பிறகே குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்தனர்.