பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும், எம்எல்ஏவுமான ஆகாஷ் விஜய்வர்கியா, மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதற்காக போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக வெளியான விடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஆகாஷ் விஜய்வர்கியா மீதும், அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
செய்தியாளர்கள் முன்னிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றதால், இந்நிகழ்வை செய்தியாளர்கள் விடியோவாகவும், போட்டோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாவது: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பழுதடைந்த வீடுகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆகாஷ் வர்கியாவும், அவரது ஆதரவாளர்களும் இடிப்பதை நிறுத்துமாறு கூறியபடி, மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்.
இதுகுறித்து ஆகாஷ் வர்கியா கூறுகையில், நல்ல நிலையில் உள்ள வீடுகளையும் ஊழியர்கள் இடித்து தள்ளினார்கள். இது வீட்டின் உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நடைபெறும் சதி. ஆளும் காங்கிரஸ் தலைவர்கள், நிலத்தை கையகப்படுத்தும் நோக்கத்துடன் நல்ல நிலையில் உள்ள வீடுகளையும் இடிக்க விரும்பு
கிறார்கள் என்று தெரிவித்தார்.
சிறையில் அடைப்பு: ஆகாஷ் வர்கியா இந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம் அவரை புதன்கிழமை மாலை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.