மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பாத்பாரா பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை நிகழ்ந்ததையடுத்து, பாத்பாரா பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாத்பாராவில் நிகழ்ந்த வன்முறை குறித்து மாநில ஆளுநர் கே.என். திரிபாதி வருத்தம் தெரிவித்துள்ளார். அமைதியை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை என்றார்.
இதையடுத்து, வன்முறை நிகழ்ந்த பாத்பாரா பகுதியை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா தலைமையில் மூன்று பேர் அடங்கிய பாஜக குழு சனிக்கிழமை பார்வையிட்டது. அவருடன் எம்.பி.சத்யபால் சிங் மற்றும் பி.டி.ராம் ஆகியோர் சென்றனர்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக மாநில காவல் துறை செயல்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். மாநிலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்துவிட்டதை முதல்வர் மம்தா பானர்ஜியால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதனால்தான் மாநிலத்தை சுடுகாடாக மாற்றி வருகிறார் என்று எஸ்.எஸ். அலுவாலியா குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அங்கு பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இடையே அங்கு வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சாலையோரம் கடை வைத்திருப்பவர் மற்றும் அங்கிருந்த 17 வயது இளைஞன் ஆகியோர் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸார் வானத்தை நோக்கி சுட்டதாக கூறுகின்றனர். பின்னர் எவ்வாறு 7 பேர் மீது குண்டு துளைக்கும். போலீஸார் திட்டமிட்டுதான் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்.எஸ்.அலுவாலியா குற்றம்சாட்டினார்.