பிகார் மாநிலத்தில் மூளை அழற்சி நோய், மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1-ஆம் தேதியில் இருந்து இதுவரை 626 குழந்தைகள், மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்து இருப்பது, மூளை அழற்சி நோயின் முக்கிய அறிகுறியாக கூறப்படுகிறது.
பிகாரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக முசாஃபர்பூர் மாவட்டத்தில் 128 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 108 குழந்தைகளும், கேஜ்ரிவால் மருத்துவமனையில் 20 குழந்தைகளும் அடங்கும்.
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென குறைவதற்கு, லிச்சி பழம்தான் காரணம் என்றும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், லிச்சி பழத்தை உண்ணும்போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில குழந்தைகளுக்கு வைரஸ் மூலம் பரவக்கூடிய ஜப்பான் மூளை அழற்சி, ஹெர்பஸ் ஆகிய நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமை மருத்துவர் எஸ்.கே.சஹி கூறுகையில், பிணவறைக் கூடம் மருத்துவக் கல்லூரி முதல்வரின் கண்காணிப்பில் உள்ளது. எனவே இதுகுறித்து அவரிடம் குழு அமைத்து உரிய விசராணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.