சிம்லா: ஹிமாச்சல் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் உள்ள பஞ்ஜார் பகுதியிலிருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடகுஷானி என்ற இடத்திற்கு தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள மலைப்பாங்கான கோர்ச் என்ற பகுதியை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, நிலைதடுமாறி அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த 25 நபர்களில் மீதமுள்ள 10 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.