ராமர் கோயில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று சிவசேனை தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரௌத் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
இதுகுறித்து, சஞ்சய் ரௌத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"பெரும்பான்மையினரால் முடிவு எடுக்கப்படும். 125 கோடி மக்களின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் இல்லையா? உச்சநீதிமன்றம் அதன் பணியை தொடரட்டும். ஆனால், எங்களுக்கு பல்வேறு வழிகள் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் என்றால் என்ன? நரேந்திர மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் மற்றும் மக்கள் தான் எங்களுக்கு உச்சநீதிமன்றமே.
தேர்தல் பிரசாரத்தின்போது ராமர் கோயில், சட்டப்பிரிவு 370, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் தான் எழுப்பப்பட்டது. இது தேச நலன் சார்ந்த பிரச்னைகள். மக்கள் இந்தப் பிரச்னைகளின் அடிப்படையில் தான் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
ராமர் கோயில் கட்டப்படும். ராமர் கோயில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. 2019-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய பெரும்பான்மையை பெற்றுள்ளது.
ராமர் கோயில் விவகாரமும் ஒரு பிரச்னை. அதனால் சட்டமாகட்டும், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவராகட்டும், யாராலும் ராமர் கோயில் கட்டப்படுவதை தடுக்க முடியாது. இது மக்களின் தீர்ப்பு, அதனால் தான் அவர்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.
இந்த வழக்கு தொடரும். ஒட்டுமொத்த நாடே ராமருக்கு சொந்தமானது. அதனால், மோடி மற்றும் ஆதித்யநாத் தலைமையில், ராமர் கோயில் கட்டப்படும்.
சர்தார் படேலுக்குப் பிறகு, காஷ்மீர் பிரச்னையை தீர்க்கும் திறன் அமித் ஷாவுக்குத் தான் உள்ளது. அவர் நாட்டைப் பற்றியும், ஹிந்துத்வாவைப் பற்றியும் பேசுவார். காஷ்மீர் இந்தியாவின் அங்கம் தான் என்பதில் இரண்டு விதமான கருத்துகளே கிடையாது" என்றார்.