அதிகரித்த கொலை மிரட்டல்கள்: கொல்கத்தா மாட்டுக்கறித் திருவிழா ரத்து 

வலதுசாரி அமைப்புக்களின் தொடர் கொலை மிரட்டல்களை அடுத்து கொல்கத்தாவில் நடைபெற இருந்த  மாட்டுக்கறித் திருவிழா நிகழ்வானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்த கொலை மிரட்டல்கள்: கொல்கத்தா மாட்டுக்கறித் திருவிழா ரத்து 

கொல்கத்தா : வலதுசாரி அமைப்புக்களின் தொடர் கொலை மிரட்டல்களை அடுத்து கொல்கத்தாவில் நடைபெற இருந்த  மாட்டுக்கறித் திருவிழா நிகழ்வானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய கொல்கத்தாவின் சூடெர் தெருவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வரும் 23-ஆம் தேதியன்று, மாட்டுக்கறித் திருவிழா ஒன்றை நடத்த உணவகம் திட்டமிட்டது. அதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஒன்று விளம்பரப் பணிகளை செய்து வந்தது.

அதேநேரம் வலதுசாரி அமைப்புக்களின் எதிர்ப்பையடுத்து வியாழனன்று மாட்டுக்கறித் திருவிழாவின் பெயர் முதலில் மாற்றம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அர்ஜுன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வியாழனன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

முதலில் இந்த நிகழ்ச்சிக்கு 'கொல்கத்தா மாட்டுக்கறித் திருவிழா (Kolkata Beef Festival)' என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இதுதொடர்பான விளமபங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியான உடன், பெயரில் 'பீப்' என்று இருந்த காரணத்தால் பல்வேறு வலதுசாரி அமைப்புகள் தொடர்பான பேஸ்புக் பக்கங்கள் மற்றும்  தனிநபர்களிடமிருந்து மிரட்டல்கள் வரத் துவங்கியது.

பின்னர் தேவையற்ற சர்ச்சைகளைக் குறைக்கும் பொருட்டு கல்லூரி மாணவர் ஒருவரின் ஆலோசனையை ஏற்று அதன் பெயர் Kolkata Beef Festival  என்பதிலிருந்து Kolkata Beep Festival  என்று மாற்றப்பட்டது. அதற்கு பிறகு எதிர்மறை விமர்சனங்கள் வெகுவாக குறைந்துள்ளது.

ஆனால் உண்மையில் இந்த நிகழ்வுக்கு எந்த விதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை. பல்வேறு விதமான மாட்டுக்கறி உணவு வகைகளை மக்களுக்கு  அறிமுகம் செய்யும் பொருட்டே இது நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் வலதுசாரி அமைப்புக்களின் தொடர் கொலை மிரட்டல்களை அடுத்து கொல்கத்தாவில் நடைபெற இருந்த  மாட்டுக்கறித் திருவிழா நிகழ்வானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த 'தி ஆக்சிடெண்டல் நோட்' நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

எங்களது குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு நேற்று ஒருநாள்மட்டும் 300 அலைபேசி அழைப்புகள் வந்திருந்தது. அவற்றில் பாதி அழைப்புகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தது என்றாலும், மீதமுள்ளவை எல்லாம் நேரடியான கொலை மிரட்டல்கள்.

மிக முக்கியமாக எங்களது நிகழ்வுக்கு வரத் திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் எங்கள் குழு உறுப்பிப்பினர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே இந்த நிகழ்வானது ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'எனக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த அழைப்புக்கள் மற்றும் பதிவுகளின் காரணமாக எனது சமூக வலைதள கணக்கையே நீக்கிவிட்டேன்.ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இடங்களிலிருந்தெல்லாம் எனக்கு அழைப்புகள் வந்தன' என்று அந்நிறுவன உறுப்பினர் ஒருவர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com