கொல்கத்தா : வலதுசாரி அமைப்புக்களின் எதிர்ப்பையடுத்து கொல்கத்தாவில் நடைபெற இருந்த மாட்டுக்கறித் திருவிழாவின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய கொல்கத்தாவின் சூடெர் தெருவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வரும் 23-ஆம் தேதியன்று, மாட்டுக்கறித் திருவிழா திருவிழா ஒன்றை நடத்த உணவகம் திட்டமிட்டது. அதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஒன்று விளம்பரப் பணிகளை செய்து வந்தது.
இந்நிலையில் வலதுசாரி அமைப்புக்களின் எதிர்ப்பையடுத்து கொல்கத்தாவில் நடைபெற இருந்த மாட்டுக்கறித் திருவிழாவின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அர்ஜுன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முதலில் இந்த நிகழ்ச்சிக்கு 'கொல்கத்தா மாட்டுக்கறித் திருவிழா (Kolkata Beef Festival)' என்றுபெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இதுதொடர்பான விளமபங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியான உடன், பெயரில் 'பீப்' என்று இருந்த காரணத்தால் பல்வேறு வலதுசாரி அமைப்புகள் தொடர்பான பேஸ்புக் பக்கங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து மிரட்டல்கள் வரத் துவங்கியது.
பின்னர் தேவையற்ற சர்ச்சைகளைக் குறைக்கும் பொருட்டு கல்லூரி மாணவர் ஒருவரின் ஆலோசனையை ஏற்று அதன் பெயர் Kolkata Beef Festival என்பதிலிருந்து Kolkata Beep Festival என்று மாற்றப்பட்டது. அதற்கு பிறகு எதிர்மறை விமர்சனங்ககள் வெகுவாக குறைந்துள்ளது.
ஆனால் உண்மையில் இந்த நிகழ்வுக்கு எந்த விதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை. பல்வேறு விதமான மாட்டுக்கறி உணவு வகைகளை மக்களுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டே இது நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.