நாட்டின் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த புதிதாக அமைந்துள்ள அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இதனால் விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தொழில்துறை வளர்ச்சியும் முடங்கியுள்ளது. இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. எனவே பிரதமரும், நிதியமைச்சரும் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, நாட்டின் பொருளாதாரம் 2018-19 நிதியாண்டில் 6.8 சதவீதம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகும். மேலும் வேலைவாய்ப்பின்மையும் இதே நிதியாண்டில் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு தொழில்துறை மற்றும் விவசாயத்துறையில் ஏற்பட்ட சரிவு முக்கிய காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஊரகப்பகுதிகளில் 5.8 சதவீத ஆண்களும், 3.8 சதவீத பெண்களும், நகரப்பகுதிகளில் 7.1 சதவீத ஆண்களும், 10.8 சதவீத பெண்களும் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாக புள்ளியியல் அமைச்சகம் மற்றும் நிரல் செயலாக்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவில் தெரிவித்துள்ளது.