வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்துக்கு நிகரானதாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் முன்னிலையில், பாஜக மூத்த தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய தாக்கல் செய்த இந்த பொது நல மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அதை பரிசீலித்த நீதிபதிகள் கூறியதாவது: கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதத்துக்கு நிகராக வந்தே மாதரம் பாடலையும் அங்கீரிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறுவதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை. வந்தே மாதரம் பாடல் ஏற்கெனவே தேசியப் பாடலாகத்தான் உள்ளது என்பதை மனுதாரர் அறிவார் என்று நம்புகிறோம் என்று கூறி அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அஸ்வினி குமார் உபாத்யாய தாக்கல் செய்த மனுவில், வந்தே மாதரம் பாடலுக்கு, ஜன கண மன எனத் தொடங்கும் தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின்போது இப்பாடல் மிக முக்கியப் பங்கு வகித்தது. 1896-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில், இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது. தேசியப் பாடல், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு சம மதிப்பளிக்க வேண்டும். அத்துடன், இரு பாடல்களையும் ஊக்குவிக்க தேசிய அளவில் மத்திய அரசு கொள்கை வகுக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டு பாடல்களும் பாடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.