இந்தியாவுடன் முழுமையான போரில் பாகிஸ்தானால் ஈடுபட முடியாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கார்கில் போரின் 20ஆவது ஆண்டு வெற்றி தினத்தையொட்டி எதிரி நாட்டு படைகளை விரட்டியடித்து இந்திய எல்லையைப் பாதுகாத்த ராணுவ வீரர்களுக்கு மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது ராஜ்நாத் பேசியதாவது:
நமது வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் ஒருபோதும் மறக்க இயலாது. இந்தியாவுடன் அண்டை நாடானது (பாகிஸ்தான்) முழு அளவிலான போரிலோ அல்லது ஒரு வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்ளான போரிலோ ஈடுபட முடியாது. அது எப்போதும் மறைமுகப் போரில் மட்டுமே ஈடுபட முடியும் என்றார் அவர்.
இதனிடையே, ராணுவம், கப்பல் மற்றும் விமானப் படை தளபதிகளுடன் தேசிய போர் நினைவிடத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறும்போது: எதற்கும் அஞ்சாத தைரியம் மற்றும் உயரிய தியாகத்தின் மூலமாக நமது ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லையின் புனிதத்தையும் அதன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார்.