நள்ளிரவு 12 மணி வரை பேரவையில் அமரத் தயார் என்று கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் அமளிக்கு மத்தியில் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்னும் நடைபெற்று வருகிறது. இன்று முழுவதும் விவாதம் நடைபெற்ற நிலையில், மாலை 6 மணிக்கு அமளி காரணமாக பேரவையை 10 நிமிடம் ஒத்திவைத்தார் சபாநாயகர். இதையடுத்து, நீண்ட நேரத்துக்குப் பிறகு, பேரவை மீண்டும் கூடியது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்தக்கூடாது என்றனர்.
அதேசமயம், நள்ளிரவு 12 மணி வரை பேரவையில் இருக்கத் தயார், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பிஎஸ் எடியூரப்பா சபாநாயகரிடம் தெரிவிக்கையில்,
"இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்பதாக முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். நாங்கள் நள்ளிரவு 12 மணி வரை பேரவையில் இருப்போம். காங்கிரஸ் மற்றும் மஜத பேசும்போது நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சித்தராமையா, முதல்வர் மற்றும் நீங்கள் (சபாநாயகர்) திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள்.
எங்களது கொறடாவிடம் கேட்டபோது, நள்ளிவரவு ஆனாலும் அனைத்து விவாதங்களும் நிறைவடையும் வரை நாங்கள் இங்கு இருப்போம் என்றோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும்" என்றார்.
இதனிடையே உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மஜத கூறினார்கள். இதன்காரணமாக, சட்டப்பேரவையில் கூச்சல், அமளி ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜனநாயகத்தைக் காப்போம் என்று முழக்கம் இடும் எம்எல்ஏ-க்களை நோக்கி சபாநாயகர் பேசுகையில்,
"ஏன் இப்படி செய்கிறீர்கள்? இது சரி அல்ல. நான் 12 மணி வரை அமரத் தயார்" என்றார்.
இதனால், கர்நாடக சட்டப்பேரவை நள்ளிரவு வரை நடைபெறும் என்று தெரிகிறது.