காங்கிரஸ் கட்சிக்கு இன்றும் ராகுல் காந்தியே தலைவர், வரும் காலத்திலும் அவரே தலைவர் என்று ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,
ராகுல் காந்தி தான் கட்சியின் தலைவர். வரும் காலத்திலும் அவர் தலைவராகவே இருப்பார். கட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போதே இதை நான் கூறினேன். பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்க்கும் தைரியம் அவருக்கு இருக்கிறது.
உச்சம் தொட்ட அனைத்தும் ஒருநாள் சரிவைச் சந்திக்க நேரிடும். பாஜகவிலும் அது நடைபெறும். அவர்கள் தற்போது உச்சம் தொட்டுள்ளனர். தற்போது தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றாவிட்டால், மக்கள் விரைவில் அவர்களை நிராகரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம் படைத்தவர்கள். எந்த முடிவாக இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும். இது அனைத்துக் கட்சிகளுக்கும் ஒன்றானது. பாஜக தற்போது நடந்துகொள்ளும்விதம் தவறான முன் உதாரணமாக அமைகிறது. அதிகாரத்தில் இருக்கும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவது தவறானது.
கட்சியின் அடுத்த தலைவரை காங்கிரஸ் காரியக் கமிட்டி விரைவில் முடிவு செய்யும்" என்றார்.