எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் உள்ளிட்டவற்றை அரசே தீர்மானிக்கும் வகையிலான ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்திருத்தம் ஆர்டிஐ சட்டத்துக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தகவல் ஆணையர்களின் பணிக்காலம் உள்ளிட்டவற்றை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம், தேர்தல் ஆணையருக்கு நிகரான அதிகாரத்தை இந்த சட்டத்திருத்த மசோதா பறிக்கிறது. இது சுயாதீன அமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல் என்று ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவுக்கு விமரிசனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
எனினும், இந்த சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மையான எண்ணிக்கை இல்லாததால் அங்கு இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.