புது தில்லி: மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் திங்களன்று நிறைவேறியது.
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்ட (திருத்த) மசோதா 2019 மக்களவையில் கடந்த வெள்ளி கிழமை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா மீது திங்களன்று விவாதம் நடந்தது.
தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் பணியை வேகப்படுத்துவதற்கு இந்த மசோதா வழிவகை செய்யும்.
இதுதொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமைகள் அமைப்புகளின் தலைவர்களாக நியமனம் செய்யப்படுவோரின் பதவிக் காலம் குறைக்கப்படுகிறது. இனி நடைமுறையில் உள்ள 5 வருடங்கள் என்பதில் இருந்து 3 வருடங்களாக குறைக்கப்படுகிறது.
அதேபோல இப்போதுள்ள நடைமுறையின்படி முன்னாள் இந்திய தலைமை நீதிபதியுடன், உச்ச முன்னாள் நீதிபதி ஒருவரும் இனி தேசிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக முடியும்.
இந்த நியமனங்களில் அரசின் தலையீடு இருக்க வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சியினர் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர் மாநிலங்களவையில் குரல் ஓட்டெடுப்பின் வழியே மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே இரு அவைகளிலும் இம்மசோதா முறைப்படி நிறைவேறியுள்ளது.