சண்டிகர்: ஹரியாணா மாநிலத்தில் பிறந்த சில மணி நேரத்திலேயே பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாயே கழிவு நீர் கால்வாயில் குப்பையைப் போல தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைத்தால் நகர் பகுதியில் பச்சிளம் பெண் குழந்தை கால்வாயில் வீசப்படுவதும், அதனை இரண்டு நாய்கள் தூக்கி சாலையில் போடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில், டோக்ரா கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் பாலிதீன் கவரைச் சுற்றி குழந்தையை சாலையோர கழிவு நீர் கால்வாயில் தூக்கி வீசுகிறார். அவர் அங்கிருந்து நகர்ந்ததும் இரண்டு தெரு நாய்கள், அந்த பாலிதீன் கவரைப்பிடித்து இழுத்து குழந்தையை மீட்டு வெளியே போடுகின்றன.
நாய்கள் ஓயாமல் குரைத்ததைப் பார்த்து அங்கு வந்த மக்கள், பச்சிளம் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை 1,100 கிலோ கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. அதன் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. குழந்தையை மீட்கும் தீவிர முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.